×

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, பிப்.13: திருவண்ணாமலையில் 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் முனவர்பாஷா மகன் ஜாவித்(32). ஓட்டலில் பரோட்டோ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். திருமணமானவர். மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்தபோது, அதே ஓட்டலில் வேலை செய்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 29.9.2020 அன்று சம்பந்தப்பட்ட அந்த பெண்ணின் வீட்டுக்கு ஜாவித் சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணின் 9 வயது மகளிடம், ஜாவித் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனால், அந்த சிறுமி அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த ஜாவித், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பிய தாயிடம் தனக்கு நடந்த கொடுமையை சிறுமி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், வாலிபர் ஜாவித்தை போக்ேசா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அப்போது, 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் ஜாவித்துக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதுதவிர, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ₹5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த வாலிபர் ஜாவித்தை, போலீசார் கைது செய்து பாதுகாப்புடன் அழைத்துச்சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Tags : POCSO court ,Thiruvannamalai ,Javid ,Munavarpasha ,street ,Anna Nagar, Tiruvannamalai ,Paroto ,POCSO ,Tiruvannamalai ,
× RELATED காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று...